பதிவு செய்த நாள்
23
டிச
2017
11:12
திருப்பூர்: ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், கவிநயா நாட்டியாலயா மாணவ, மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 58ம் ஆண்டு மண்டல பூஜை, நவ., 17ல் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், மாலைநேரங்களில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. வாரந்தோறும், ஞாயிறு மதியம், அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம், திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், கவிநயா நாட்டியாலயா சார்பில், பரதநாட்டியம் நடந்தது. விநாயகர், முருகன், சிவன், ஐயப்பன் வேடம், தசாவதார வேடங்களில், மாணவியர் பரத நாட்டியமாடி, பக்தர்களை பரவசப்படுத்தினர். குறிசொல்லும் குறத்தி பாட்டு, பானை மேல் பரதநாட்டியம் என, 22 மாணவியர் நடனமாடினர். கவிநயா நாட்டியாலயா நிர்வாகி மேனகா மேற்பார்வையில், இந்நிகழ்ச்சி நடந்தது. மண்டல பூஜையில் நேற்று மாலை, குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, விளக்கு பூஜை செய்து, ஐயப்பனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.