சேது கடற்கரையில் கழிவு குப்பை குவியல்: பக்தர்கள் பரிதவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2017 12:12
ராமநாதபுரம்:ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் விட்டுச்செல்லும் கழிவு குவியல்களால், பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர். இப்பகுதியினை சுத்தம் செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுகடற்கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.
இங்கு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய முக்கியமான இடமாக கருதப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இறந்தவர்களின் அஸ்தி கரைத்து வழிபடுவதை விட, சேதுக்கரை கோயிலில் இந்த காரியங்கள் செய்வது சிறப்பு என்கின்றனர். இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தது கடலில் குளிக்கும் போது தங்களது பழைய துணிகளை கடலில் விட்டுச் செல்கின்றனர். இந்த பழைய துணிக்கழிவு அதிகளவில் கரைகளில் கிடக்கின்றன. கோயில் வாசலில் படித்துறை கட்டப்பட்டுள்ளது. இதில் தான் பக்தர்கள் தாங்கள் புனித நீராட செல்வார்கள். இந்தப்பகுதியில் கழிவுகளாக கரையில் இருப்பதால், புனித நீராட முடியாமல் தவித்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உள்ளாட்சி நிர்வாகம் அப்பகுதியில் துப்புரவு தொழிலாளிகளை நியமித்து உடனுக்குடன் பக்தர்கள் விட்டுசெல்லும் கழிவுகளை அகற்றம் செய்ய வேண்டும்.அப்போது தான் நிம்மதியாக பக்தர்கள் புனித நீராட முடியும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.