பதிவு செய்த நாள்
25
டிச
2017
11:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டுடன் நேற்று துவங்கியது. இக்கோயிலில் நேற்றிரவு மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து திருமுறை பாடப்பட்டது. கோயில் திருவாட்சி மண்டபத்தை பல்லக்கில் மாணிக்கவாசகர் மூன்று முறை வலம் வந்து எழுந்தருளினார். சிவாச்சார்யாரால் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு, ஓதுவாரால் திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்பட்டன. தினமும் வீதிவுலா டிச., 31 வரை நடக்கும்.ஜன., 1 காலை மாணிக்க வாசகர் சப்பரத்தில் கிரிவலம் நிகழ்ச்சியும், இரவு கோயிலுக்குள் கண்ணுாஞ்சல் முடிந்து, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ராட்டினத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழா நடக்கும். ஜன., 2 அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைல காப்பு சாத்துப்படியாகி, உற்சவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தனித்தனி பூச்சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் கிரிவலம் செல்வர்.