கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதசுவாமி கோயிலில் மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இக்கோயிலில் டிச., 24ல் ஆருத்ரா தரிசன விழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆருத்ரா தரிசனத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்படும். நேற்று காலை 10:30 மணிக்கு சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜருக்கு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடந்தன.
பின்னர் சந்தனாதித் தைலம் பூசப்பட்டது. இந்த அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின், அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, மலர்களால் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.