தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் சொக்கநாதர் கோயில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. அதன் வளாகத்தை சுற்றி புதர்மண்டிக்கிடக்கிறது. எனவே இதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வராகநதியின் தெற்கு கரையில் சொக்கநாதர் கோயில் உள்ளது. மிகப்பழமையான இக்கோயிலில் சொக்கநாதர், பார்வதி, முருகன் தனி, தனி சன்னதிகள் உண்டு. சிவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். ஜெயமங்கலம், சில்வார்பட்டி, மேல்மங்கலம் கிராமங்களை சோ்ந்தவர்கள் தரிசனம் செய்கின்றனர்.
இக்கோயில் முறையாக பராமரிப்பு இல்லாததால் சுவர் சேதமடைந்துள்ளன. சுற்றி புதர்மண்டிக்கிடக்கிறது. சுற்று சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியில் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அருகில் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நிதி ஒதுக்கீடு செய்து கோயிலை பராமரிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என ஜெயமங்கலம் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் கூறுவது என்ன:
அவதி: காளிமுத்து: பல நுாறு ஆண்டு பழமையான இக்கோயில் பழுதடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக சீரமைக்கப்படவில்லை எனில் கட்டடங்கள் மேலும் சேதமடைந்த நிலைக்கு சென்று விடும். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதம்: முத்துக்கருப்பு: இக்கிராமத்திற்கு ஆன்மிகத்தோடு நெருக்கமான தொடர்புள்ளது. சீனிவாசப்பெருமாள் கோயில், சொக்கநாதர் கோயில், கிருஷ்ணன் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் இவை பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. எனவே கோயில்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.