பதிவு செய்த நாள்
03
ஜன
2018
11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், விலை மதிப்பில்லாதது என கருதப்பட்ட, பழைய உற்சவர் சிலையிலும், அது பழுதானதால் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையிலும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. புதிய உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில், பல நுாற்றாண்டு பெருமை கொண்டது. இங்குள்ள, பழைய உற்சவர் சிலை சிதிலம் அடைந்ததாக கூறி, புதிய சிலை செய்ய, அறநிலையத்துறை முடிவு செய்தது. பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதில், 75 சதவீதம் தங்கம் உள்ளது; பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என, காலம் காலமாக கூறப்பட்டு வந்தது. கடந்த, 2016ல் செய்யப்பட்ட, புதிய உற்சவர் சிலை மற்றும் அம்பாள் சிலையில், 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த அளவுக்கு அதில் தங்கம் சேர்க்கப்படவில்லை என்றும், சிலை செய்யப்பட்டதில், முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி, காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு படி, கடந்த, 10ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், காஞ்சிபுரத்தில் விசாரணை நடத்தினார். அதன் பின், தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், சிலையை செய்த மாசிலாமணி மற்றும் ஸ்தானிகர்கள் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, காஞ்சிபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி, டி.எஸ்.பி., முகிலன் முன்னிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ரகுபதி தலைமையில், 12 போலீசார், ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளை நேற்று ஆய்வு செய்தனர். ஏகாம்பரநாதர் பழைய உற்சவர் சிலை உட்பட நான்கு சிலைகளை, நவீன கருவிகளுடன் பரிசோதித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. விலை மதிக்க முடியாதது என கருதப்பட்ட, பழைய சிலையிலும் தங்கம் கிடையாது; புதிதாக செய்யப்பட்ட சிலையிலும், போதிய அளவு தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனால், விலை மதிப்பில்லாதது என கருதப்பட்ட உண்மையான சிலை எங்கே... அந்த சிலை தான் என கருதப்படும் பழைய உற்சவர் சிலையும் போலி தானா... என பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி கூறியதாவது: நேற்று நடந்த ஆய்வில், பழைய சிலைகள் இரண்டு, புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை மற்றும் அம்மன் சிலை என நான்கிலும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, தவறு எங்கு நடந்துள்ளது... யார் செய்தனர் என்பதை கண்டறிவோம். விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.