சபரிமலை: சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் மதியம் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில் மகரஜோதி விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புல்மேட்டில் 1500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர். கூடுதல் வெளிச்சம் தரும் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. தகவல் தொடர்புக்காக நாளை முதல் புல்மேட்டில் பி.எஸ்.என்.எல்., தற்காலிக டவர் செயல்பட தொடங்கும். பாண்டித்தாவளம், பம்பை ஹில்டாப், அட்டத்தோடு உள்ளிட்ட இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. சன்னிதானத்தில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.13-ம் தேதி கூடுதல் போலீசார் சன்னிதானம் வர இருக்கின்றனர்.
பேட்டை துள்ளல் : மண்டல காலம் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக பேட்டைதுள்ளல் நடைபெற்றாலும், மகரவிளக்குக்கு முன்னோடியாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு பின்னர் இங்கு பேட்டைதுள்ளல் நடைபெறாது. நாளை மதியம் 12:30க்கு அம்பலாப்புழா பக்தர்களும், மதியம் 3 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளல் நடத்துவர். பின்னர் இவர்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை வந்து சன்னிதானம் வருவர்.
திருவாபரணம் : மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நாளை மறுநாள் மதியம் பந்தளத்திலிருந்து புறப்படுகிறது. அன்று காலை முதல் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும் திருவாபரணம், மதியம் உச்சபூஜைக்கு பின்னர் பெட்டிகளில் அடைக்கப்பட்டு தலைசுமையாக புறப்படும். இந்த பவனி 14-ம் தேதி மாலை 6:30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்ற சில நிமிட நேரங்களில் பொன்னம்பலமேட்டில் ஜோதி காட்சி தரும்.