பதிவு செய்த நாள்
10
ஜன
2018
05:01
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் குண்டம் திருவிழா, நாளை (ஜன.11ல்) கோலாகலமாக நடக்கிறது. ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 2017 டிச., 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் பூ மிதிக்கும் பக்தர்கள், விரதம் கடைபிடித்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டமிறங்கும் நிகழ்ச்சி நாளை (ஜன.11ல்) கோலாகலமாக நடக்கிறது. பூமிதிக்கும் பக்தர்கள் கடந்த இரு நாட்களாக, கோவில் வளாகத்தில் வரிசையில் காத்துள்ளனர். அதன்படி ஆண்கள் வரிசையில், வாய்க்கால் ரோட்டை சேர்ந்த மூர்த்தி என்பவர், பூச்சாட்டு முதலில் இருந்து வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதேபோல் பெண்கள் பிரிவில், பச்சமலை ரோட்டை சேர்ந்த சாந்தி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், சத்தியமங்கலம், பெருந்துறை, சிவகிரி, ஈரோடு, கோவை பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் அமர்ந்துள்ளனர். இன்று காலை, 10:30 மணிக்கு மாவிளக்கு காப்பு கட்டுதல் முடிந்ததும், அம்மன் பூத வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விேஷச பூஜையில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் கண்காணிப்பில், இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள், ஆறு டி.எஸ்.பி.,க்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் தலைமையில் மொத்தம், 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.