பதிவு செய்த நாள்
13
ஜன
2018
11:01
கூடலுார்: சபரிமலையில் நாளை, மாலை நடக்க உள்ள மகரஜோதி விழாவிற்காக, புல்மேடு பகுதியில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகரஜோதி விழாவிற்காக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் அதிகம் வருவர். 2011ல் மகரஜோதி தரிசனத்தை காண புல்மேடு பகுதியில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி, 102 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்குப்பின், ஒவ்வொரு ஆண்டும் புல்மேட்டில் போலீஸ் பாதுகாப்பு பலத்தப்பட்டு, பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
நாளை, மகரஜோதி விழா நடக்க உள்ள நிலையில், புல்மேடு பகுதியில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமுளி, வண்டிப்பெரியாரில் இருந்து புல்மேடு அருகே உள்ள கோழிக்கானம் வரை கேரள அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே இடத்தில் கூடுதல் பக்தர்கள் கூடாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மகரஜோதி தரிசனம் முடிந்ததும், பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புல்மேட்டில் இருந்து வண்டிப்பெரியார், குமுளிக்கு இரவு முழுவதும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதனால் பக்தர்கள் அவசரப்படாமல் திரும்ப போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.