மகரஜோதி தரிசனம் காண .. சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2018 03:01
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி தரிசனம் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலையில் நாளை(ஜன.14) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பவனி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மதியம் 1:47-க்கு மகர சங்கரம பூஜை நடக்கிறது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மதியம் 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொடங்கின. அந்த நேரத்தில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட, சரணகோஷங்கள் முழங்க திருவாபரணபவனி புறப்பட்டது. திருவாபரண பெட்டியை குருசாமி கங்காதரன் தலையில் சுமந்து வந்தார். பூஜா பாத்திரங்கள் அடங்கிய பெட்டியை சிவன்பிள்ளையும், கொடிபெட்டியை பிரதாபசந்திரனும் சுமந்து வந்தனர். மொத்தம் 23 பேர் அடங்கிய குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து வருவர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் இந்த பவனி தங்கியது.
நாளை (ஜன.14) மாலை 5:30 மணிக்கு சரங்குத்திக்கும், 6:20க்கு சன்னிதானத்திற்கும் வந்து சேரும். தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து சிலைக்கு ஆபரணங்கள் அணிவிப்பர். நடைதிறந்து தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்து சில நிமிடங்களில் சந்நிதானத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஐந்தாவது மலையான காந்தமலைப் பகுதியின் பொன்னம்பல மேட்டில் ஜோதி ரூபமாக, தெய்வீக ஒளியாக மூன்று முறை மகரஜோதி எழும்பி காட்சியளிக்கும். இதை தரிசனம் செய்ய இரண்டு நாட்களாக பக்தர்களில் பெரும்பகுதியினர் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தை சுற்றியுள்ள காடுகளில் தார்பாய், மரக்கிளைகளால் தற்காலிக ஷெட்டுகள் அமைத்து தங்கியுள்ளனர். சபரிமலையில் நாளை, மாலை நடக்க உள்ள மகரஜோதி விழாவிற்காக, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.