பதிவு செய்த நாள்
15
ஜன
2018
10:01
பழநி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பழநிமுருகன் கோயிலில் நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் தரிசனத்திற்காக நான்கு மணிநேரம் வரை காத்திருந்தனர். தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. கோயில் தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் நிரம்பியிருந்தது. மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் வேல் அலகு குத்தியும், காவடிகள் எடுத்து வெளிப்பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். அங்கு வெளிப்பிரகாரம் வரை திரண்ட பக்தர்கள் நான்கு மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.