பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
வால்பாறை: வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, முருகனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவில், திருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில் நேற்று காலை, 12:00 மணிக்கு அம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது. விழாவில், இன்று காலை மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மாலை, 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கல்லார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலின், திருவிழா கடந்த, 9ம் தேதி துவங்கியது. நேற்று காலை, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மாலை, 6:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சோலையாறு எஸ்டேட் மூன்றாவது டிவிஷன் மாரியம்மன், முனீஸ்வரர் திருக்கோவிலில், நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரண்டாவது டிவிஷன் மாரியம்மன் கோவிலில், இன்று காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. சோலையாறு எஸ்டேட் மூனீஸ்வரர் சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.