பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
கருங்குழி: கருங்குழி அருகே, சிதிலமடைந்து வரும், பழமையான கோட்டையை, தொல்லியல் துறை ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கருங்குழி அருகே பழமையான கோட்டை காணப்படுகிறது. பழைய மதுராந்தகம் சாலையை ஒட்டி இந்தக் கோட்டை உள்ளது. கி.பி., 1,700ம் ஆண்டு வாக்கில், ஆங்கி லேயர் இக்கோட்டையைக் கைப்பற்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. கோட்டை பற்றிய ஆதாரமாக விளங்கிய சில கல்வெட்டுகள் சிறிது சிறிதாக காணாமல் போய் கொண்டுள்ளன. உதாரணமாக, இக்கோட்டையைப் பற்றி விளக்கும் ஒரு முக்கிய கல்வெட்டு இங்கு பதிக்கப்பட்டிருந்தது. அதைத் தற்போது அந்த இடத்தில் காணவில்லை. தேடி பார்த்ததில், அப்பகுதியில் குடியிருக்கும் ஒருவரின் வீட்டு குளியலறை சுவரில் அக்கல்வெட்டு பதிக்கப்பட்டிருக்கிறது. பழமை வாய்ந்த இக்கோட்டையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் பல அரிய தகவல்கள் தெரிய வரலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அக்கோட்டை மேலும் அழிந்து மண் மேடாக ஆகும் முன், ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.