பதிவு செய்த நாள்
22
டிச
2011
12:12
பேரூர் : பேரூர்,நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில், 13 மணி நேர தொடர் "சனிப்பெயர்ச்சி ஹோம விழா, நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. ஹோமத்தில், நட்சத்திரங்களுக்கு 27 கலசம், நவக்கிரகங்களுக்கு 9 கலசம், மிருத்யுங்கா 2 கலசம், எமதர்மராஜா 1 கலசம், லட்சுமி நாராயணா 3 கலசம் வைக்கப்பட்டு, பூஜைகளும், சகஸ்ரநாம அர்ச்சனைகளையும் செய்தனர். மாலை 6.00 மணி வரை நடந்த ஹோமங்களை ஸ்ரீலஸ்ரீஞானசிவாச்சாரியார், பேரூர் கோவில் சிவசண்முகசுந்தர குருக்கள், சோமன் அய்யர், ஜெகன் அய்யங்கார், சோமாஸ்கந்தன் குருக்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினர் செய்தனர். அரசம்பலவாணர் கோவில் பேரூர், சின்னக்கோவில் வீதியிலுள்ள, அரசம்பலவாணர் கோவிலில் நவரத்ன சனீஸ்வரர் சன்னதி உள்ளது. நவரத்ன சனீஸ்வர பகவான் சன்னதியில், ஒன்பது கலசங்கள் வைத்து, மூன்று சிவாச்சாரியார்களைக்கொண்டு சனீஸ்வர காயத்ரி ஜெபம் நிகழ்ச்சி நடந்தது. விசேஷ அபிஷேகமும், 108 லிட்டர் பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில், 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சரவணம்பட்டியில்... கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிரவணபுரம் கவுமார மடாலயத்தில், இரண்டு நாட்களாக சனிப்பெயர்ச்சி திருவிழா மற்றும் நவக்கிரக கோவில் நன்னீராட்டு பெரு விழா நடந்தது. குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தார். நேற்று முன்தினம், சிறப்பு பரிகார வேள்வியும், நேற்று நவக்கிரக திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும், சனிப்பெயர்ச்சி விழாவும் நடந்தது. காலை 10.30 மணிக்கு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு நடந்தது. சூலூரில்... சிறப்பு யாக பூஜைகள், நேற்று முன்தினம் மாலை, சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் துவங்கியது. விநாயகர் பூஜையுடன், சனி பகவான் கும்பஸ்தாபனம் நடந்தது. பின், பரிகார ஹோமம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. மேட்டுப்பாளையத்தில்... மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் மாதேஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி சிறப்புப் பூஜை நடந்தது. சனி பகவானுக்கு சந்தனம், குங்குமம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர் அபிஷேகமும், சிறப்பு அலங் கார பூஜையும் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, தர்மகர்த்தா பொன்னுசாமி, தலைவர் சின்னதம்பி, வக்கீல் சாந்தமூர்த்தி, நந்தவனம் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருச்சபை அறக்கட்டளையினர், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.