அழியாநிலை ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2011 12:12
புதுக்கோட்டை: அழியாநிலை ஆஞ்சநேயர் கோவிலில் மஹா அனுமன் ஜெயந்தி மஹோல்ஸவ பெருவிழா நாளை (23ம் தேதி) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அழியாநிலையில் உள்ளது ஸ்ரீ விஷ்வரூபா ஆஞ்சநேயர் கோவில். இங்கு ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா பக்தி பரவசத்துடன் நடப்பது வழக்கம். 13வது ஆண்டு அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவ பெருவிழா நாளை ஆரம்பமாகிறது. விழாவை முன்னிட்டு நாளை (23ம் தேதி) அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், லெஷ்மி ஹோமம், தன்வந்திரி ஹோமம், நரசிம்ம ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. 24ம் தேதி காலை 10 மணி வரை மஹா சுதர்ஸன ஹோமம், ராம மூலமந்திர ஹோமம் நடக்கிறது.11 மணிக்கு ஸ்ரீ விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து உல்ஸவ மூர்த்தி ஆஞ்சநேயர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை அழியாநிலை ஸ்ரீ விஷ்வரூப ஆஞ்சநேயர் நற்பணிமன்ற நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.