பதிவு செய்த நாள்
22
ஜன
2018
12:01
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவூறல் உற்சவம், இன்று நடக்கிறது. திருவிழாக்கள் இல்லாத நாளில், சுவாமி ஆற்றங்கரையில் ஓய்வு எடுத்து திரும்பும் நிகழ்வு, திருவூறல் உற்சவம் எனப்படுகிறது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உற்சவர், திருவூறல் உற்சவத்தின் போது, திருவல்லிக்கேணியில் இருந்து, ஈக்காட்டுத்தாங்கலில், அடையாறு ஆற்றங்கரை வரை சென்று திரும்புவார். இந்த ஆண்டிற்கான திருவூறல் உற்சவம், இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை வழியாக, காலை, 11:30 மணிக்கு, ஈக்காட்டுத்தாங்கல் ஆற்றங்கரையை அடையும். அங்கு, அவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. அங்கிருந்து மாலை புறப்பட்டு, இரவு கோவிலை வந்தடைகிறார். வீதி உலாவின் போது, வயதானவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு, பெருமாள் தரிசனம் தரும் வகையில், மண்டகப்படி எனும் நடைமுறை உள்ளது. இம்முறை உற்சவர் சிலை சிதிலமடைந்து வருவதாகவும், அதன் காரணமாக, கோவில் நிர்வாகம் மண்டகப்படியை நிறுத்த முடிவு செய்தது. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், சமீபத்தில் கோவிலில் நடந்தது. இக்கூட்டத்தில், இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள், மண்டகப்படிதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ஒருசில மாற்றங்களுடன், மண்டகப்படி தொடர்வது என, கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.