பதிவு செய்த நாள்
22
ஜன
2018
01:01
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில்களில், தைத் திருவிழா துவங்கி உள்ளது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மற்றும் சமயபுரம் கோவில்களில், தைத்தேர் திருவிழா கொண்டாடப்படும். ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் நடைபெறும் தைத்தேர் திருவிழாவுக்காக, 19ம் தேதி, முகூர்த்தக்கால் நடப்பட்டது. 30ல், நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின், காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் தைத் தெப்பத் திருவிழா, நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ல், ராமதீர்த்தக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சுவாமியும், அம்பாளும் எழுந்தருளியவுடன், இரவு, 7:00 மணிக்கு, தெப்ப உற்சவம் நடக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைத் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன், இன்று துவங்குகிறது. காலை, 7:30 மணிக்கு கொடியேற்றமும், மாலையில், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. விழாவையொட்டி, பல்வேறு வாகனங்களில், அம்மன் திருவீதி உலா நடைபெறும். 30ல், தெப்ப உற்சவமும், 31ல், தீர்த்தவாரியும் நடக்கிறது. அன்று இரவு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறும்.