பதிவு செய்த நாள்
22
ஜன
2018
02:01
கூவத்துார் : திருவாலீஸ்வரர் கோவிலில், முதல் முறையாக, தெப்ப உற்சவம், மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. கூவத்துாரில் உள்ள, திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் மிக பழமையானது. தமிழக இந்து சமய அறநிலையத்துறையின், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம் நிர்வகிக்கிறது. கோவில் நீண்டகாலம் பராமரிப்பின்றி சீரழிந்தது. 2.5 கோடி ரூபாயில், திருப்பணிகள் செய்து, கடந்தாண்டு செப்., 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தைப்பூச உற்சவத்தை முன்னிட்டு, வாலிதீர்த்த குளத்தில், முதல் முறையாக, மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்பட உள்ளது. வரும், 28ம் தேதி, செல்லியம்மன், அங்காளம்மன்; 29ல், ஆதிகேசவபெருமாள்; 30ல் திருவாலீஸ்வரர் என, தினமும் மாலை, 6:00 மணிக்கு, தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.