பதிவு செய்த நாள்
23
டிச
2011
11:12
ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவை., கைலாசநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோடி நாம ஜெபம், மாபெரும் ருத்திர ஹோம வேள்வி நடந்தது. நவகைலாயங்களில் சனிஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் திருநள்ளாறு சிவன் கோயிலுக்கு இணையானது. இக்கோயில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை நடைதிறப்பு அபிஷேகம் தொடர்ந்து ருத்திர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை முதல் கோடி நாம ஜெபவேள்வியும் ஒரு சேர நடந்தது. ஏராளமான பெண்கள் ஓம்நமச்சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தனர். மாபெரும் அக்னி குண்டத்தில் சிவாச்சாரியார்கள் குருபட்டர், ஐயப்பபட்டர் தலைமையில் பூர்ணாகுதி நடந்தது. பின்னர் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காலை நடைதிறப்பும், அபிஷேகம், புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. விழாவில் பொறுப்பு நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், ஸ்ரீவை.,கேஜிஎஸ் கல்லூரி முதல்வர் சங்கரநராயணன், ஸ்ரீவை.,குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி செயலர் சண்முகநாதன், ஸ்ரீவை., டவுன் பஞ்., தலைவர் அருணாசலம், ஆழ்வை டவுன் பஞ்., தலைவர் ஆதிநாதன், துணைத்தலைவர் மாரிமுத்து, விவசாய சங்க தலைவர் மாடசாமி, பேராசிரியர்கள் சேதுராமன், பக்தர் பேரவை சுபாரத்தினதங்கம் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.