பதிவு செய்த நாள்
23
டிச
2011
11:12
அனுமந்த் ஜெயந்தி விழாவை விமரிசையாக நடத்த ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெற்றிலை, லட்டு, வடை, வெள்ளி கவசம் என, வித விதமாக ஆஞ்சநேயரை அலங்கரிக்கப் பொருட்கள் குவிந்துள்ளன. அனுமந்த் ஜெயந்தி விழா வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சென்னை அசோக் நகர் பக்த ஆஞ்சநேயர் கோவிலில், கடந்த புதன்கிழமை முதல் விழா துவங்கியது. இந்த கோவிலில், 15 அடி உயரத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு முதல் நாளன்று, வெற்றி மாலை அலங்காரம் செய்யப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று, லட்டு மாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பாக அணிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து இன்று வடை மாலை அணிவிக்கப்பட்டும், ஜெயந்தி விழா தினத்தன்று வெள்ளி கவச அலங்காரம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம் ஜெயந்தி விழாவுடன் லட்சார்ச்சனையும் விமரிசையாக நடைபெறவுள்ளது. பக்தர்கள் அமரும் வகையில் கோவில் முன்புறம் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. கோவில் உட்புற வளாகத்திலும், பக்தர்களை வரிசைப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, 25ம் தேதி புஷ்ப அலங்காரமும், அன்றைய தினம், சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
ஒரு லட்சத்து எட்டு வடை அலங்காரம்: சென்னை, அசோக் நகர் சாமியார் தோட்டம் கருமாரி திரிபுரசுந்தரி கோவிலில் வீற்றிருக்கும், வீர ஆஞ்சநேயருக்கும் மகா உற்சவம் நடைபெறவுள்ளது. இதற்காக, ஒரு லட்சத்து எட்டு வடைகள் எண்ணிக்கையிலான மாலைகள் தயார் செய்யப்பட்டு, நான்கு ஆஞ்சநேயர் விக்கிரகங்கள் வைக்கப்பட்டு, அவற்றை சுற்றி வடமாலைகள் அணிவிக்கப்பட்டு சதுர வடிவிலான சிறப்பு வடை அலங்காரம் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக, 25க்கும் மேற்பட்டோர் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அன்றைய தினம், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, ஆஞ்சநேயரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். நங்கநல்லூரில் விசுவரூப ஆஞ்சநேயர் கோவிலில், அனுமந்த் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. கடந்த 20ம் தேதிமுதல் யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின் றன. அனுமந்த் ஜெயந்தி நாளான நாளை காலை 7 மணிக்கு, மகாசாந்தி யக்ஞ தொடர்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து திருமஞ்ஜனம் துவங்குகிறது. காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கிரகபிரீத்தி, கடப்புறப்பாடும் நடக்கிறது. பின், விசேஷ மகாசாந்தி திருமஞ்ஜனம், விசேஷ அலங்காரமும் நடக்கிறது. காலை 11 மணி முதல் சிறப்பு அன்னதானமும் அதை தொடர்ந்து லட்சார்ச்சனையும் நடக்கிறது. இந்த ஏற்பாடுகளை மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் மற்றும் பவமான் அன்னதானம் டிரஸ்ட் செய்துள்ளது.