பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
ஆத்தூர்: இறந்த வீரன் சொர்க்கம் செல்வதை வழியனுப்பும் காட்சி இடம்பெற்றுள்ள, 16ம் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு சதிகல் பராமரிப்பின்றி உள்ளது.
ஆத்தூர், பட்டுத்துறை ஊராட்சி, சிவசங்கராபுரம், பெரியசாமி கோவில் அருகே, மாடு கட்டும் இடத்தில், ஜல்லிக்கட்டு சதிகல் பராமரிப்பின்றி உள்ளது. அதை, சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆய்வு செய்துவிட்டு கூறியதாவது: பழங்காலத்திலிருந்தே தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், மாடுபிடி சண்டை நடந்துவந்திருக்கிறது. இறந்த வீரர்களுக்கு, 1,300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடுகற்கள் வைக்கப்பட்டு வந்துள்ளன. விஜயநகர பேரரசின் கீழ், வாணகோவரையர் ஆட்சி காலத்தில், சிவசங்கராபுரத்தில் நடந்த ஏறுதழுவல் நிகழ்ச்சியின்போது இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் இது. கணவன் இறந்தவுடன், மனைவியும் உடன்கட்டை ஏறியுள்ளதால், சதி கல்லாக உள்ளது. அதில், காளை கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றை, இரு வீரர்கள் பிடித்தபடி உள்ளனர். ஒரு வீரன், கொம்புகளை பிடித்தபடி காட்டப்பட்டுள்ளான். அவன் அருகே, ஒரு பெண், சிறுவன் காட்டப்பட்டுள்ளனர்.
பெண் கையில், காப்பு உள்ளது. சுமங்கலியாக இருப்பதை உணர்த்தி, அவர் கையை உயர்த்தியுள்ளார். எருது சிற்பத்தின் கீழ்பகுதியில், மூன்று உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. ஒருவர், மேளம் போன்ற இசைக்கருவி வாசிக்கிறார். ஒருவர், சற்று குனிந்த நிலையில் பறை போன்ற கருவியை இசைக்கிறார். இறந்த வீரன், சொர்க்கம் செல்வதை வழி அனுப்புவதுபோல் காட்சி உள்ளது. காளையை அடக்கியோ அல்லது காளையை மீட்டோ, வீரன் உயிர் இறந்திருக்கலாம். இச்சிற்பம், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை. தமிழரின் வீரத்துக்கு ஆதாரமாய் உள்ள நடுகல், பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளது. அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொண்டு, நடுகல்லை சேலம் அருங்காட்சியகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.