காரைக்குடி, குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூச விழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கேடகத்தில் வீதி உலா வந்தார். 27-ம் தேதி தங்கரத வீதி உலாவும், 29-ம் தேதி வெள்ளி ரத வீதி உலாவும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 5:15 மணிக்கு சண்முகநாத பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4:45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.இரவு 8:00 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று பகல் 1:45 மணிக்கு குன்றக்குடி தேனாற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி கோயில் பரம்பரை அறங்காவலர் பொன்னம்பல அடிகள் செய்திருந்தார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.