பதிவு செய்த நாள்
01
பிப்
2018
11:02
தஞ்சாவூர்: கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், மாசிமக விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும், மகாமக விழா சிறப்புடையது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டு மாசி மாதத்தில், மகம் நட்சத்திரம், பவுர்ணமியன்று, மாசிமக விழா நடைபெறுவது வழக்கம்.
அன்று மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகையம்மன் தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி, ஏராளமானோர் புனித நீராடுவர். இத்தகைய சிறப்பு பெற்ற மாசிமக விழாவை முன்னிட்டு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் முன்புறமுள்ள தேருக்கு, 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின் முகூர்த்தகாலுக்கு அபிஷேகங்கள் செய்து, தேரின் மேல் பந்தக்கால் நடப்பட்டது. மாசிமக விழா, வரும் பிப்., 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, 20ம் தேதி கொடியேற்றமும், 23ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலாவும், 24ம் தேதி தன்னைத்தானே பூஜித்தல், ஓலைச்சப்பரம், ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், 27ம் தேதி ஐந்து தேரோட்டமும், மார்ச், 1ம் தேதி முக்கிய விழாவான, தீர்த்தவாரி மகாமககுளத்தில் நடக்கிறது.