பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
சூரமங்கலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 30ல் தொடங்கியது. அன்றிரவு, பூத வாகனத்தில், அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வெள்ளி கவசம் சாத்துப்படி செய்யப்பட்டது. நேற்று காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், பூங்கரகம் எடுத்து, திருவீதி உலா வந்தனர். மாலை, பக்தர்கள் அலகு குத்தி, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர். இரவு, அக்னி கரகம் எடுத்தனர். மஞ்சள் நீராட்டுதலுடன், இன்று விழா நிறைவடைகிறது.
* தீவட்டிப்பட்டி அருகே, பூசாரிப்பட்டியில், மகா காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 16ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று, அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், ஆடு, கோழி பலியிட்டு, 200க்கும் மேற்பட்ட பெண்கள், தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, அலகு குத்துதல் நடந்தது. இன்று, சத்தாபரணம், நாளை மஞ்சள் நீராட்டம் நடக்கவுள்ளது.
* ஓமலூர் அருகே, சிக்கனம்பட்டி, குப்பூர் காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 16ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. மலர் அலங்காரத்தில், அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, திரளான பக்தர்கள் வடம்பிடித்து, தேரை இழுத்துச்சென்றனர். கோவிலை சுற்றி, தேர் வலம் வந்தது. இன்று இரவு, சத்தாபரணம் நடக்கிறது.