பதிவு செய்த நாள்
03
பிப்
2018
11:02
கீழக்கரை: சேதுக்கரை சின்னக்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயில் அருகே வெண்பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்மா முனிவர் அகத்தியர் சிலை உள்ளது. பீடத்தில் இருந்து 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட நின்ற நிலையில் அகத்தியரின் சிலை முழுவதும் வெண்பளிங்கு கல்லால் (மார்பிள்) ஆனது. ஒரு கையில் கமண்டலமும், மறுகையில் தண்டமும் வைத்துள்ளார். வலதுகால் பாதம் தாழ்ந்தும் இடது பாதம் சற்று மேல்நோக்கியும், சாய்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 250 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கருங்கற்கலால் ஆன மண்டபம், ஓட்டுக்கட்டடம் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் கடந்த 2015, மே 22 ல் புதிய கோயில் எழுப்பி, கும்பாபிஷேகம் நடந்தது.
கோயில் பூஜாரி ஜி. சரவணக்குமார் கூறியதாவது: கடலில் கிடைத்த அகத்தியரின் சிலை, இப்பகுதியில் வேறெங்கும் காணக்கிடைக்காது. கயிலாயத்தில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கு நடந்த திருமணத்தை காண இயலாததால், தென் பகுதிக்கு சென்று தமிழை பரப்பி, அருந்தொண்டு செய்துவா என அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் வடக்குபகுதி உயர்ந்தும், தென்பகுதி தாழ்ந்தும் சென்றது. அகத்தியரின் பாதம் பட்டதால், சீராக சமநிலை அடைந்ததாக புராண தகவல் கூறுகின்றது. அதனை நினைவுபடுத்தும் வகையில் அகத்திய முனிவரின் பாதங்கள் அமைந்திருப்பது அரிய காட்சியாகும். தை, ஆடி, மகளாய அமாவாசை, கார்த்திகை தினங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதன் அருகே அகத்தியர் நீரை சுத்திகரணம் செய்த தீர்த்தக்குளம் உள்ளது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அகத்தியரின் தொண்டையும், தமிழ் மொழியின் சிறப்பையும் கூறி வருகிறோம் என்றார்.