பதிவு செய்த நாள்
05
பிப்
2018
12:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து கடைகளை அகற்றுவது குறித்து உயர்மட்ட நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தொன்மையான, புராதன சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன் கோயிலை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழிபாட்டு தலமான இக்கோயிலில் விதிகளை மீறி அதிகளவில் கடைகள் நடத்த அனுமதித்தால் வர்த்தக கேந்திரமாக மாறியது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கடைகளில் அதிகளவில் குவித்து வைத்திருந்ததால் தீ விபத்து நிகழ காரணமானது. குறுகிய இடத்தில் அதிக கடைகள் இருந்தது தீயின் கொடூரத்தை அதிகரித்தது. இதனால் கடைகளை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களும் கடைகளை கோயிலுக்கு வெளிப்புறம் நடத்த வேண்டும் என விரும்புகின்றனர். தீ விபத்தில் சேதமுற்ற கட்டடங்களை ஆய்வு செய்ய வரும் உயர்மட்ட நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின்படி கடைகளை அகற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உயர்மட்ட குழு இன்று வருகை : கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: தொல்லியல், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஸ்தபதிகள், சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்களை கொண்ட உயர்மட்ட நிபுணர் குழு கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய இன்று(பிப்., 5) வருகிறது. கட்டடங்களின் ஸ்திரத்தன்மை, தீ விபத்துக்கான காரணம் உட்பட அனைத்து அம்சங்கள் குறித்து குழு ஆய்வு செய்யவுள்ளது. மறுபுனரமைப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளது. கடைகள் தேவையா என இக்குழு ஆராய்ந்து முடிவு செய்யும். இதுகுறித்து அரசுக்கு அறிக்கையும் அளிக்கும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே கடைகளை மூடக்கோரி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் 9 கடைகளுக்கு எதிரான நோட்டீஸ், இணை கமிஷனர் தலைமையிலான தீர்ப்பாயத்தில் பிப்., 14 தேதி விசாரணைக்கு வருகிறது. உயர்மட்ட குழு ஆய்வுக்காக கட்டட இடிபாடுகள் அகற்றப்படவில்லை. நேற்றும் வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர், என்றார்.
கோயில் நிர்வாகத்துடன்பேசி நடவடிக்கை : கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: கோயிலில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் கூட பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் கோயிலில் தீ விபத்து ஏற்படாதவாறு தீ தடுப்பு முறைகள் மேற்கொள்வது குறித்து தனி குழு ஏற்படுத்தப்படும். அக்குழு கோயிலை முழுமையாக ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின்படி கோயில் நிர்வாகத்துடன் ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது தீ விபத்தில் சேதமடைந்த கட்டடங்கள், துாண்களின் ஸ்திரத்தன்மையை கண்காணித்து வருகிறோம். உயர்மட்ட குழுவும் ஆய்வு செய்யவுள்ளது. கடைகளை அகற்றுவது குறித்து கோயில் நிர்வாகத்துடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பக்தர்கள் கருத்து: தீயணைப்பு கருவிகள் இல்லை : தனியார் தொழிற்சாலைகளில் தீயணைப்பு கருவிகள் உள்ளதா என அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஆனால், உலக புகழ்பெற்ற இக்கோயிலில் மூலஸ்தானம் தவிர்த்து வேறு எங்கும் தீயணைப்பு கருவிகள் இல்லை. நிர்வாகமும், உயர்மட்ட மேல்நிலை தொட்டி கட்டி அதில் இருந்து ஒவ்வொரு கட்டடத்திற்கும் தீயை அணைக்க குழாய்களை அமைக்க வேண்டும். கோயில் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் தருகிறது. பி.சங்கர், மதுரை
பக்தர்கள் மீது அக்கறையில்லை: நாட்டில் அம்மனுக்கென்று பிரசித்தி பெற்ற ஒரே கோயில் மீனாட்சி அம்மன் கோயில் தான். இங்கு தீயணைப்பு, மீட்பு நிலையத்தை கூட அரசு அமைக்காதது வருத்தமளிக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பில் அக்கறை இல்லை. வணிக நோக்கில் விதிகளைமீறி கடைகளை அனுமதித்துள்ளனர். கடைகளை அகற்றி கோயிலின் புனிதத்தை காக்க அதிகாரிகள் இனியாவது முன்வர வேண்டும். எம்.ஜெயஸ்ரீ, மதுரை
கடைகளால் சிலைகள் சேதம்: கோயிலில் துாண்களிலுள்ள பழமையான சிலைகளை பாதுகாக்க, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும். அழகான சிலைகள் உள்ள மண்டபத்திற்குள் கடைகளை அனுமதித்ததால், பல சிலைகள் சேதமடைந்துள்ளன. கோயில் நிர்வாகம் வருமானத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை தவிர்க்க வேண்டும். சிலைகளை காப்பாற்ற கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆர்.வனிதா, மதுரை
கண்காணிப்பு கேமரா அவசியம்: மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் மின்னல் தாக்கியும், சுவாமி சன்னதியில் மழைவெள்ளம் புகுந்தும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகாவது நிர்வாகம் சுதாரித்து இருக்க வேண்டும். தற்போது, தீ பிடித்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் உதவியுடன் புராதன சிலைகளை காக்க வேண்டும். எஸ்.மோகன், திருச்சி