பதிவு செய்த நாள்
06
பிப்
2018
02:02
உடுமலை: அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள, துாண் மண்டபத்தை பழமை மாறாமல் புனரமைத்து, பக்தர்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்திமலை அடிவாரத்தில், பழமை வாய்ந்த அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலின் நுழைவு பகுதியில், பழமை வாய்ந்த துாண் மண்டபம் உள்ளது. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 36 துாண்களை கொண்டு, மேல் அடுக்கும் கற்களை கொண்டு கட்டப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் வகையில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.மண்டபத்தின் உட்புறத்தில், விசேஷங்கள் நடத்துவதற்காக, இரு புறமும், மேடையும் உள்ளது. இந்த மண்டபத்தில், திருமணங்கள் உட்பட விசேஷங்களை நடத்த சுற்றுப்பகுதி மக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும், இந்து அறநிலையத்துறையின் பிரசாத ஸ்டாலும், அங்கு செயல்பட்டு வந்தது.பல்வேறு காரணங்களால், தற்போது, இந்த மண்டபத்தினுள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெரும்பாலான நேரங்களில், மண்டபத்தின் இரும்பு கதவுகள் பூட்டியே வைக்கப்படுகிறது. இதனால், சுவாமி தரிசனம் முடிந்து, இளைப்பாற, மண்டபத்துக்கு வரும் பக்தர்கள், ஏமாற்றமடைகின்றனர். முன்புறமுள்ள படிக்கட்டுகளில், வெயிலில் உட்கார வேண்டிய நிலைக்கு பக்தர்கள் தள்ளப்படுகின்றனர். துாண் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்து, பக்தர்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். மேலும், திருமூர்த்திமலையின் சிறப்புகளையும், வரலாற்று தகவல்களையும் உள்ளடக்கிய, சிறிய அருங்காட்சியகம் அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.