பதிவு செய்த நாள்
07
பிப்
2018
05:02
நல்லம்பள்ளி: தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, காலபைரவர் கோவில்களில், சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சண காசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரt மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
தைமாத தேய்பிறை அஷ்டமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, பைரவருக்கு அஷ்ட பைரவ யாகம், அஷ்ட லஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிேஷகங்கள் மற்றும் 1,008 அர்ச்சனை, 28 வகையான ஆகம பூஜைகள் நடந்தன. பின், காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு மேல், உற்சவ தட்சணகாசி காலைபைரவர் கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில் உட்பட மாவட்டத்தில் சிவன் கோவில்களில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம், அபிேஷகம் நடந்தது.