பதிவு செய்த நாள்
08
பிப்
2018
01:02
செஞ்சி: மேல்மலையனுார் அங்களம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவம் நடத்துவது குறித்து கலெக்டர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் 13 நாள் நடக்கும் மாசி திருத்தேர் உற்சவம் வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 20ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நடக்க உள்ளது. இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், மின் விளக்கு, பஸ் வசதி, அத்தியாவசிய தேவைகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம்,மேல்மலையனுார் கோவில் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.
கூட்டத்திற்கு,கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் வரவேற்றார். டி.ஆர்.ஓ., பிரியா, சப் கலெக்டர் மெர்சி ரம்யா, டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், அறங்காவலர் குழுதலைவர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் குமாரபாலன், தாசில்தார் மணிகண்டன், பி.டி.ஓ.,க்கள் சொக்கநாதன், வெங்கடேஷ்,நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், தீயணைப்பு நிலைய அலுவலர்சந்தானகுமார், கோவில் கண்காணிப்பாளர் வேலு,மேலாளர்கள் மணி, சந்தீஷ் மற்றும் சுகாதாதரத்துறை, போக்குவரத்து துறை, மின்வாரியத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இதில் விழாக்காலத்தின்போது தற்காலிக பஸ் நிலையம் அமைத்து, பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கழிவறைகள், குடிநீர் வசதி,செய்ய வேண்டும். முக்கிய சந்திப்புகள், கிராம தெருக்களில், பழுதான மின் விளக்குகளை உடனே சரி செய்ய வேண்டும். கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை நாள் ஒன்றுக்கு நான்கு முறை அகற்ற வேண்டும். அக்னி குளம், பெரியஏரியில் பக்தர்கள் குளிப்பதை தடை செய்ய வேண்டும்.எந்ததெந்த ஊருக்கு எங்கிருந்து பஸ்கள் புறப்படும் என்ற விவரத்தை ஆங்காங்கே பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.
அரசு டாக்டர் தலைமையில் மருத்துவ குழுவினர், இரண்டு ஆம்புலன்ஸ் வாகனத்துடன், தயார் நிலையில் இருக்க வேண்டும்.தீமிதி விழாவின் போது தீயணைப்பு படையினர் தகுந்த பாதுகாப்புகளை செய்ய வேண்டும், பக்தர்களை ஒழுங்கு படுத்தவும்,குற்ற செய்களை தடுக்கவும் அதிக அளவில் போலீசாரை நியமிக்க வேண்டும். பழுதான சாலைகளை உடனே சரி செய்யவேண்டும். மின் கசிவு, மின் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை,அவ்வப்போது உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.