பதிவு செய்த நாள்
08
பிப்
2018
04:02
கோயிலுக்கு செல்வது வழிபாடு நடத்த தான். வேண்டுதல் நிறைவேறியவர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வர். இதற்காக கோயிலுக்கு வெளியில் தேங்காய், பழம் கடைகள் இருந்தால் போதும். கோயிலுக்குள் மற்ற எந்த கடைகளும் கூடாது. மற்ற வழிபாட்டு தலங்களுக்குள் எந்த கடைகளும் இருப்பதில்லை. மீனாட்சி கோயிலில் அளவுக்கு அதிகமான கடைகளை அனுமதித்ததால் தான் தீ விபத்து கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. குறிப்பாக கிழக்கு ராஜகோபுரத்தின் கீழே இரு புறமும் கடைகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது, வருவாயை மட்டுமே கோயில் நிர்வாகம் இலக்காக கொண்டுள்ளதை காட்டுகிறது. தீ விபத்து நடந்த ராஜகோபுரம் முதல் சுவாமி சன்னதி செல்லும் வழியிலுள்ள மண்டப து ாண்களில் நிறைய சிற்பங்கள் உள்ளன. இவை, கடைகளால் இருக்கும் இடம் தெரியாமல் போயின. பழமை மாறாமல் சிறந்த வல்லுனர்களை கொண்டு கட்டடங்களை சீரமைக்க வேண்டும். மீனாட்சி கோயிலில் ஒவ்வொரு இடமும், துாண்களும், மண்டபங்களும் கட்டட கலையின் நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றை வீடியோ, போட்டோவாக ஆவணப்படுத்த வேண்டும். இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழும் போது, அவற்றை கொண்டு பழமை மாறாமல் கட்டடங்களை புதுப்பிக்கலாம். கே.சகாதேவன், பொறியாளர், பொன்மேனி
ஆகம விதிப்படி பூஜை : மதுரை மீனாட்சி கோயில் தீ விபத்து வேதனை அளிக்கிறது. இன்று தமிழகத்தில் எது நடந்தாலும் அதில் அரசியல் செய்கிறார்கள். இக் கோயிலில் பல ஆண்டுகளாக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை ஏற்படாத இது போன்ற சம்பவங்கள் இன்று ஏற்பட காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். இன்று, தமிழகத்தில் 28 ஆகமங்கள் இருப்பினும் மகுடா ஆகமம், காரண ஆகமம், காமிகா ஆகமம் அடிப்படையில் தான் பெரும்பலான கோயில்களில் பூஜை நடக்கிறது. இதில் மீனாட்சி கோயிலில் எந்த ஆகம அடிப்படையில் பூஜை நடக்கிறது, பூஜை முறைகள் என்ன, அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பதை ஆன்மிக நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
- அ.ஞானஸ்கந்தன், இயக்குனர், ஞானப்பிரகாசர் சிவபிரகாசர் ஆய்வு மையம், மதுரை.
மீண்டும் நடக்குமா நாட்டியாஞ்சலி: மதுரை மீனாட்சி கோயிலில் நடராஜர் வலது காலை துாக்கி ஆடுவர். முன்பு கோயிலில் வெள்ளியம்பல நடராஜருக்காக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. தற்போது திருவிழா தவிர கோயிலுக்குள் கலை நிகழ்ச்சிகள் எதுவுமே நடப்பது இல்லை. இது போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் மீண்டும் நடந்தால் கோயிலில் எந்தவிதமான விபத்துக்களும் நடக்காது. அந்த அளவிற்கு அந்த கலைகளுக்கு சக்தி இருக்கிறது. கோயிலில் பராமரிப்பின்றி கிடக்கும் நவக்கிரக தோட்டத்தையும் பராமரித்தால் நவக்கிரகங்களின் அருள் பக்தர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
எம்.லட்சுமணன், இசை கலைஞர், மதுரை.
பக்தர்களுடன் ஆலோசனை கூட்டம்: ஸ்மார்ட் மதுரை திட்டத்தின் கீழ் மீனாட்சி கோயிலை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும். கோயிலில் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை கடைபிடிக்க வேண்டும். தீப்பெட்டி, ஆயுதங்கள் இருக்கிறதா என்று பக்தர்களை சோதிக்கும் நிர்வாகம் தங்கள் பக்கம் உள்ள பலவீனங்களை சோதித்து பார்க்க வேண்டும். சித்திரை வீதிகளில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தியதில் மக்களுக்கே பெரும் பங்கு உண்டு. கோயில் பராமரிப்பில் பக்தர்களையும் ஈடுபடுத்த வேண்டும். கோயிலின் உறுதி தன்மையை அடிக்கடி சோதிக்க வேண்டும். மாதம் ஒரு முறை பக்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பாதுகாப்பு ஆலோசனை பெறலாம். பேராசிரியர் எம்.விக்னேஷ், மதுரை.