பதிவு செய்த நாள்
10
பிப்
2018
11:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, அங்கு செயல்பட்ட, 22 கடைகளின் பொருட்கள், உயர் நீதிமன்ற கிளை உத்தரவுபடி நேற்று அகற்றப்பட்டன. கிழக்கு கோபுரம் சுவாமி சன்னதி பகுதியில் உள்ள, வீரவசந்தராயர் மண்டபத்தில் பூஜை பொருட்கள், செயற்கை நகைகள், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும், 41 கடைகள் இருந்தன. 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 19 கடைகள் எரிந்தன. இதில், இந்த பகுதியில் உள்ள, கற்கள் பெயர்ந்து விழுந்ததால், கோவில் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இங்கு செயல்பட்டு வந்த கடைகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டது.வீரவசந்தராயர் மண்டபத்தில் தீயினால் பாதிப்படையாத, 22 கடைகளில் உள்ள பொருட்களை நேற்று மதியம், 12:00 மணிக்குள் அகற்ற வேண்டும், என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று காலை முதல், இதற்கான பணிகளில் கோவில் நிர்வாகம் இறங்கியது. காலை, 10:00 மணி முதல், கடைகளில் உள்ள பொருட்களை வியாபாரிகள், பழைய கல்யாண மண்டபம் பகுதியில் மூட்டை கட்டி வைக்க துவங்கினர். பாதுகாப்பு கருதி, கடை உரிமையாளர்கள் தவிர, யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.தீ விபத்தில் கருகிய கடைகளில், மிச்சம் இருந்த பொருட்களை வியாபாரிகள் சேகரிக்க முயன்றனர். ஆனால், அதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், கோவில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை செலுத்தி, பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என, கோவில் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.பாக்கி செலுத்தாத வியாபாரிகள், எதிர்ப்பு தெரிவித்தனர். பின், வாடகையை அவர்கள் செலுத்தினர். அம்மன் சன்னதி பகுதியில் உள்ள கடைகளையும் திறக்க, கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வழக்கம் போல் பூக்கடைகள் மட்டும் செயல்பட்டன.
பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் கடைகள்?: காலி செய்த கடை பொருட்களை வைக்க, கோவில் நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்க வேண்டும் என, கடை உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதைதொடர்ந்து, மேற்கு - தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் உள்ள பழைய, மண்டல அறநிலையத் துறை இணை கமிஷனர் அலுவலகம் தேர்வு செய்யப்பட்டது. தவிர, அகற்றப்பட்ட கடைகளுக்கு, மூன்று வாரங்களில் இடம் ஒதுக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதால் கோவில் அருகில்தான் இடம் ஒதுக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவில் அருகில் காலி இடங்கள் இரண்டு தான் உள்ளன. ஒன்று குன்னத்துார் சத்திரம். இங்கு மாநகராட்சி சார்பில் கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனால், இங்கு உடனடியாக கடைகள் அமைய வாய்ப்பில்லை. பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம், தற்போது, பார்க்கிங் இடமாக உள்ளது. இங்கு ஒரு பகுதியை மட்டும் தற்காலிகமாக கடைகளுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. கடை உரிமையாளர்கள் இதை ஏற்கும் மனநிலையில் உள்ளனர்.மாநகராட்சியுடன் கோவில் நிர்வாகம் ஆலோசித்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும்.