பதிவு செய்த நாள்
12
பிப்
2018
10:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மகா சிவராத்திரியன்று, லட்ச தீபம் ஏற்றுவதற்கு, கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு, லட்சம் தீபங்கள் ஏற்றப்படும். இதை முன்னிட்டு, காலை முதல் நள்ளிரவு வரை, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
நாளை மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் வண்ணம் கலந்த உப்புகளை கொண்டும், பல்வேறு வகையான பொருட்களாலும் சுவாமி படம் வரைந்து, அதை சுற்றி, பக்தர்கள் தீபம் ஏற்றுவர். மேலும், கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் உள்ளிட்ட குளக்கரைகளில், லட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுவர். வழக்கமாக கோவிலின், இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் பிரகாரங்களில் தீபம் ஏற்ற, பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததால், கிளி கோபுர நுழைவு வாயிலை கடந்து, இரண்டு, மூன்றாம் பிரகாரங்களில், லட்ச தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. அதேபோல், இந்தாண்டு தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு மற்றும் மூன்றாம் பிரகாரங்களில் லட்ச தீபம் ஏற்ற அனுமதியில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கு மற்றும் ஐந்தாம் பிரகாரங்களில் ஏற்றலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான இடங்களில் மணல் நிரப்பப்பட்ட பக்கெட் வைக்கவும், 22 இடங்களில் தீத்தடுப்பு கருவிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்த மின்சாரம் வரும் போது, தானாகவே மின் சப்ளை துண்டிக்கும் வகையில், மின்சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.மகா சிவராத்தியன்று, சிறப்பு தரிசனம் மற்றும் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.