பதிவு செய்த நாள்
12
பிப்
2018
02:02
ஓசூர்: சூளகிரி அருகே உள்ள ஒமதேப்பள்ளி முனீஸ்வரன் கோவிலில் நடந்த மறுபூஜையில், ஆடுகள் பலியிட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த சூளகிரி அருகே உள்ள ஒமதேப்பள்ளி கிராமத்தில், முனீஸ்வரன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம் கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை கோவிலில் மறுபூஜை நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. சூளகிரி, பெல்லட்டி, தியாகரசனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, மோத்துகானப்பள்ளி உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அசைவ விருந்தில் பங்கேற்றனர். கோவிலில் நடந்த மறுபூஜையில், பிளேக் மாரியம்மன், லகுமம்மா, எல்லம்மா, முனீஸ்வரன் ஆகிய சுவாமிகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* இதேபோல், போச்சம்பள்ளி அடுத்த பாப்பானூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் மற்றும் முனியப்பன் கோவிலில், இரண்டாம் ஆண்டு முப்பூஜை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினர். நேற்று காலை சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு, பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. விழாவில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.