பதிவு செய்த நாள்
12
பிப்
2018
02:02
பெருந்துறை: பெருந்துறையில் நடந்த, அண்ணமார் சுவாமி உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பெருந்துறையில், சென்னிமலை ரோட்டில், தனியார் அரங்கில், அண்ணமார் சுவாமி கதை, உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி, கடந்த டிச.,22ல் தொடங்கியது. திருப்பூர், கண்டியன் கோவில், சிவசக்தி கலைக்குழுவினர் நடத்தினர். குன்னுடையான், தாமரை பிறப்பு முதல், தேர் இழுத்தல், பொன்னர் சங்கர் திருமணம், பட்டம் சூடுதல், கிளி வேட்டையாடுதல், வேடுபடை விரட்டுதல், பொன்னர் சங்கர் படுகளம் காண்பது வரை, மூன்று தலைமுறை கதை, என மொத்தம், 51 நாட்கள், உடுக்கையடி பாடலாக பாடப்பட்டது. இறுதி நிகழ்வான படுகளம் காணும் நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம், வீரப்பூர் கூகுண்டாம் பள்ளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பெருந்துறை சோழீஸ்வரர் கோவில் இருந்து, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதன்பின், படுகளம் காணும் நிகழ்வுடன், உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.