பதிவு செய்த நாள்
13
பிப்
2018
12:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி, பொதுப்பணித்துறை முன்னாள் முதன்மை பொறியாளர், பாலசுப்ரமணியன் தலைமையிலான உயர் மட்டக்குழு ஆய்வு செய்ததுமீனாட்சி கோவிலில், பிப்., 2 இரவு, 10:15 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில், வீர வசந்தராய மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 30க்கும் மேற்பட்ட கடைகள் சாம்பலாகின. தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய, பொதுப்பணித்துறை முன்னாள் முதன்மை பொறியாளர், பாலசுப்ரமணியன் தலைமையில், 12 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அரசு நியமித்தது. இக்குழு முதற்கட்ட விசாரணையை, பிப்.,8ல் நடத்தியது.குழுவினர், தீ விபத்து நடந்த பகுதியில் நேற்றும் ஆய்வு செய்தனர். வீரவசந்தராய மண்டபத்தின் கல்துாண்கள், மேற்கூரைகள் விழாமல் தடுக்க, 30 லட்சம் ரூபாயில், இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கும் பணி, நேற்றுடன் நிறைவடைந்தது.வீரவசந்தராய மண்டபத்தில் குவிந்துள்ள கட்டுமான கழிவுகளை, இன்று முதல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முழுமை பெற்றால் மட்டுமே, விசாரணைக்கு ஏதுவாக அமையும். அடுத்தடுத்து ஆய்வு செய்ய வசதியாக, தீயில் எரிந்த மின் ஒயர்களை அகற்றி வருகின்றனர்.தீயில் எரிந்த கடைகளில், எஞ்சிய பொருள் எதுவுமில்லை. விபத்தின் போதே அவை முழுமையாக எரிந்து விட்டன. உயர்மட்டக்குழு ஆய்வுக்கு வசதியாக, வீரவசந்தராய மண்டபத்தை, பளிச் என, வைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.