பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
திருத்தணி : மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், 1008 சங்காபிஷேகம் இன்று நடக்கிறது. சிவராத்தரியையொட்டி, கோவில் நடை இரவு முழுவதும் திறத்திருக்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இன்று, மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் மற்றும், 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, இன்று, மாலை, 6:00 மணிக்கு, மூன்று யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.தொடர்ந்து, மூலவருக்கு முதற்கால சிறப்பு அபிஷேகம், பூஜையும், இரவு, 10:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
இரவு, 11:00 மணிக்கு, மூலவருக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும், நள்ளிரவு, 12:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை, அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு நான்காம் கால அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.