பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
காஞ்சிபுரம் : காஞ்சி பிராமண சமாஜத்தின் பொதுக்குழு கூட்டம், காஞ்சிபுரத்தில் நடந்தது. சமாஜத்தின் முன்னாள் நிர்வாகி ஓய்வுபெற்ற ஆசிரியர், ராஜகோபால் தலைமை வகித்தார். சமாஜ தலைவர், நீலகண்டன் முன்னிலை வகித்தார். மஹா ப்ரஸாத பாடசாலை வகுப்பு துவக்குவது என, தீர்மானிக்கப்பட்டது.அதாவது, கோவில்களில் நித்யபடி, பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற விழாக்களிலும் மற்றும் அதிருத்ரம், யக்ஞங்கள், இஷ்டிகள், விசேஷ ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. இது போன்ற விசேஷங்களுக்கு, ஆச்சார அனுஷ்டானங்களுடன் சாஸ்திரோத்தமாக பிரசாதங்கள் தயாரிக்கும் முறைகளை, பிராமண சமுதாயத்திற்கு பயிற்சி கொடுக்கும் மையத்திற்கு, மஹா ப்ரஸாத பாடசாலை என பெயர். இம்மையத்தை, வரும், 19ல் துவக்குவது என, தீர்மானிக்கப்பட்டது. மேலும், அனைத்து வயது, இருபாலருக்கும், கோடை கால சமஸ்கிருத வகுப்பு துவக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மார்கழி மாத பாராயணம் மற்றும் பஜனை சிறப்பாக செய்தமைக்காக, மகளிர் அணியினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.