பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
ஊட்டி:ஊட்டி காந்தள், காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஊட்டி காந்தள் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. காந்தள் ஆதிபராசக்தி மகளிர் குழு, ஊட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
நேற்று காலை, 7:00 மணிக்கு கால சந்தி பூஜை, காலை, 11:00 மணிக்கு உச்சி கால பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பிற்பகல், 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு, மகா பிரதோஷம், மகா சிவராத்திரி வழிபாடு, 3:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு சுவாமி கோவில் வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, மாலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஸ்ரீ சர்பேந்திர நாட்டிய வித்யாலய மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, ’ மனிதனை மனிதனாக்குவது பக்திப்பாடல்களா! பல்சுவைப்பாடல்களா!’ என்ற தலைப்பில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடந்தது. ஞானாநந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சிகளில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, தட்சிணாமூர்த்தி மடாலய அறங்காவலர் குழு; காசி விஸ்வநாதர் சுவாசி ஆலய முன்னேற்ற மற்றும் சேவா சங்கம்; காசி விசாலாட்சி அம்மாள் மகளிர் குழு; ஸ்ரீமான் ராயபோயர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
*மஞ்சூர் அடுத்துள்ள மணிக்கல், பாக்கோரை, எடக்காடு கிராமங்களில் பிரசித்த பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் நடப்பாண்டு விழாவையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கு நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களின் பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.