பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
விழுப்புரம் : விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா நடந்தது. மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரின், 78 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சார்பில், விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோட்டிலுள்ள, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கலச விளக்கு, வேள்வி பூஜை, ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா நடந்தது. மழை வளம் செழிக்க, இயற்கை சீற்றம் தனிய, மனித நேயம் சிறக்க வேண்டி நடந்த கலச விளக்கு வேள்வி பூஜைக்கு, மாவட்டத் தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி, தணிக்கைகுழு மணிவாசகம், இளைஞரணி சண்முகம், மாவட்ட செயலாளர் பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினிதேவி, வேள்வி பூஜையைத் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் சுப்ரமணியன் ஆன்மிக ஜோதியை ஏற்றி வைத்தார். வட்டத் தலைவர்கள் பழனி, தர்மலிங்கம், பார்த்தசாரதி, மோகனகிருஷ்ணன், சுந்தரராஜன், ராஜேந்திரன், மகாலிங்கம், செல்வராஜ், முனுசாமி, முருகேசன், மாவட்ட வேள்விக்குழு தலைவி திரிபுரசுந்தரி, சக்திபீட பொறுப்பாளர்கள் பழனிச்சாமி, சீத்தாராமன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.