பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில், கருட சேவை உற்சவம், நேற்று விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தை மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவம், 12ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்று முதல் தினமும், காலை, மாலையில், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்தார். மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை, கருட சேவை உற்சவம் நடந்தது.இதில், கருட வாகனத்தில் எழுந்தருளிய விஜயராகவ பெருமாள், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார்.பாலுசெட்டிசத்திரத்தில், மண்டகபடி நடந்தது. இரவு, ஹனுமந்த வாகனமும், ஊஞ்சல் சேவையும் நடந்தது.வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். ஏழாம் நாள் பிரபல உற்சவமான, தேரோட்டம், 18ல், விமரிசையாக நடைபெற உள்ளது.