பதிவு செய்த நாள்
15
பிப்
2018
03:02
சேலம்: தேவாலயங்களில், சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள், 40 நாள் தவக்காலத்தை துவக்கினர். இயேசு, சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழாவுக்கு, முந்தைய, 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அப்படி துவங்கும் தவக்காலத்தின் முதல்நாள், சாம்பல் புதனாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, சேலம், நான்கு ரோடு, குழந்தை இயேசு பேராலயத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. பேராலய முதன்மை பங்குத்தந்தை கிரகோரி ராஜன், மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமை வகித்தனர். பின், பிரார்த்தனையில் பங்கேற்றவர்களின் நெற்றியில், தவத்தின் அடையாளமாக, சிலுவை இட்டனர். மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதேபோல், அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகே, ஜங்ஷன், அஸ்தம்பட்டி, ஏற்காடு, ஆத்தூர் ஆகிய இடங்களிலுள்ள தேவாலயங்களில், சாம்பல் புதன் வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, 40 நாள் தவக்காலத்தின் போது, கிறிஸ்தவர்கள், விரதம் மேற்கொள்வர். இதன்மூலம் மீதியாகும் பணத்தை, புனித வெள்ளியன்று ஏழைகளுக்கு வழங்குவர்.