வடமதுரை: அய்யலுாரில் இருந்து ஒரே குழுவாக 4,000 பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.அய்யலுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 29ம் ஆண்டாக அய்யலுார் பகுதி பக்தர்கள் கடந்த மாதம் முதல் காப்பு கட்டி விரதமிருக்க துவங்கினர். இவர்கள் அனைவரும் பாதயாத்திரை குழு குருசாமி பிச்சை தலைமையில் அய்யலுார் களர்பட்டியில் ஒன்று கூடினர்.கிராம கோயில்களான விநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், கருப்பண்ணசாமி, ராமபிரான் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அய்யலுார் அன்னை ஆதிபராசக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர். ஒரே குழுவாக சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். வரும் பிப்.17ல் சமயபுரத்தில் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.