பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
பென்னாகரம்: பென்னாகரம் அருகே கோடாராம்பட்டி, வீரபத்திர சுவாமி தேர்த்திருவிழா நேற்று மாலை நடந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட, கோடாரம்பட்டியில் அமைந்துள்ள வீரபத்திர சுவாமி கோவில் திருவிழா, மூன்று நாட்களாக நடந்தது.
பொச்சாரம்பட்டி, கோடாரம்பட்டி, நாகனூர், ஜங்கமைனூர், மந்தமேடு, மல்லாபுரம் உள்ளிட்ட பத்து ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பின், திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று மாலை நடந்த, தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், தேரை இழுத்தனர். மஹா சிவரத்திரி அமாவாசையையொட்டி, பென்னாகரம் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. பக்தர்கள் சுவாமியை வழிபட்டு, பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கோவிலில் இருந்து, அலகு குத்தியும், வண்டியை இழுத்தும், மாறுவேடம் அணிந்து வந்தும் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் நிறைவு செய்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். முன்னதாக, நெருப்பூர் அருகே எழுந்தருளியுள்ள முத்தத்திராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று, மாசி மாத அமாவாசை என்பதால் நெருப்பூர், ஒட்டனூர், ஏரியூர் மற்றும் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இங்கு வந்தவர்கள் சுவாமியை வழிபட்டு, சிலையை தூக்கி பக்தர்கள் கோவிலை சுற்றிலும் வலம் வந்தனர். அப்போது பக்தர்கள், கிரிவல பாதையில் படுத்து, சுவாமி சிலை தங்களை தாண்டி செல்லும் வகையில் படுத்திருந்தினர். இதன் மூலம், தங்கள் மீதுள்ள தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.