பதிவு செய்த நாள்
19
பிப்
2018
01:02
சின்னாளபட்டி : மூன்றாம்பிறை தரிசனத்துடன், சின்னாளபட்டியில் 133 ஆண்டு பாரம்பரிய காமன் பண்டிகை நேற்றுமுன்தினம் துவங்கியது. சின்னாளபட்டி கடைவீதியில் உள்ள காமைய(காமன்)சுவாமி கோயில், திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடத்தப்படுகிறது. சிறப்பு பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, தினம் ஒரு கட்டளைதாரர் வீதம் 15 நாட்களுக்கு வழிபாடு நடக்கும். தினமும், கட்டளைதாரர்கள் வழங்கும் செவ்வரளி, செவ்வந்தி, மல்லிகை, முல்லை, செண்டுமல்லி பூக்களால் விதவிதமான அலங்கார, ஆராதனைகள் நடைபெறும். நிறைவாக, பவுர்ணமியன்று காமன் தகன விழா நடக்கும்.இந்தாண்டிற்கான விழா, நான்கு வழிச்சாலை பிருந்தாவன தோப்பில், மூன்றாம்பிறை தரிசனத்துடன் துவங்கியது.
முன்னதாக, பேக்கரும்பு, மா, ஆமணக்கு, அரசு, அரளி இலைகள், பூக்களால் சுவாமி அலங்கரித்தல் நடந்தது. பிறை தரிசனத்தைத்தொடர்ந்து, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோயில் பீடத்தில் சுவாமி ஊன்றுதல் நடந்தது. பின்னர் நடைபெற்ற விசேஷ ஆராதனையில், சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் பவுர்ணமி(மார்ச் 1ல்)யன்று காமன் தகன விழா நடக்கும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.