கூடலுார் : கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆகியும் இதுவரை முதற்கட்டப்பணிகள் கூட நடக்கவில்லை. இது குறித்து கண்ணகி அறக்கட்டளையினர் மீண்டும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். கூடலுார் அருகே தமிழக - கேரள எல்லையான வின்னேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில்.
தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் ஒவ்வொரு ஆண்டும் சிதிலமடைந்து தற்போது முழுமையாக அழியும் நிலையை அடைந்துள்ளது. அங்குள்ள கண்ணகி சிலையும் உடைந்துள்ளது.ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா தினத்தன்று மட்டும், கோயில் வளாகத்தில் பெயரளவிற்கு சீரமைப்பு பணியை செய்து விட்டு, அதன்பின் கண்டு கொள்வதில்லை. இக்கோயிலை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர்நீதி மன்றத்தில் கடந்த 2014 ல் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல் துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, சிதிலமடைந்து வரும் கண்ணகி கோயிலை சீரமைக்க ரூ.39 லட்சத்து 33 ஆயிரத்து 725 க்கு திட்ட மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. சீரமைப்பு பணி துவங்கும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தும், பணிகள் நடைபெறவில்லை.கடந்த ஆண்டு, சித்ராபவுர்ணமி விழா முடிந்ததும் சீரமைப்பு பணிகள் துவங்கி விடும் என தொல்லியல் துறை அறிவித்திருந்தது. ஆனால் ஓராண்டிற்கு மேல் ஆகியும் இதுவரை அங்கு எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. வரும் ஏப். 29 ல் சித்ராபவுர்ணமி விழா கொண்டாட உள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். அதற்கு முன் கோயில் சீரமைப்பு பணிகை துவங்க தொல்லியல் துறை முன்வரவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வழக்கு தொடர, அறக்கட்டளையினர் முடிவு செய்துள்ளனர்.