பதிவு செய்த நாள்
20
பிப்
2018
01:02
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், திரளான பக்தர்கள், குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் அங்காளம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு குண்டம் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழா பிப்., 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிரசு எடுத்து ஆடுதல், மயான பூஜை நடந்தன. விழாவையொட்டி, பூக்குண்டம் திறப்பும், அலகு தரிசனமும் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து அக்னி கரகம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின், குண்டத்தில் பூசாரி பூப்பந்தை உருட்ட, அதை தொடர்ந்து அக்னிகரகம் இறங்கியது. இதன் பின், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். விழாவையொட்டி, அங்காளம்மனுக்கு அபிேஷகம், அன்னதானம், பரிவேட்டை, மஞ்சள் நீராட்டு, பேச்சியம்மன் பூஜை நடந்தன.