பதிவு செய்த நாள்
20
பிப்
2018
02:02
ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பணியாளர்களுக்கு, தீயணைப்புத்துறையினர் சார்பில், தீ தடுப்பு ஒத்திகை மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, பிரசித்தி பெற்ற கோவில்களில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யவும், பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சியளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருசோத்தமன் தலைமையில், கோவில் பணியாளர்களுக்கு, தீ விபத்து ஏற்படும்போது அதை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து நேற்று பயிற்சியளிக்கப்பட்டது. கோவில் வளாகம், சமையல் அறை உள்ளிட்ட இடங்களில், தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதா, என ஆய்வு செய்தனர்.
கோவிலுக்குள் செயல்படும், இரண்டு கடைகளை கோவிலுக்கு வெளியில் அமைக்க தீயணைப்புத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். மேலும், கோவில், சமையல் அறை, ஜெனரேட்டர் அறை உள்ளிட்ட இடங்களில், தீயணைப்புக்காக வைக்கப்பட்டுள்ள, ரசாயன பொடி கலந்த தீயணைப்பான் கருவிகளின் (’பயர் எஸ்டிங்கைசர்’) எண்ணிக்கையை பார்வையிட்டனர். அதன்பின், கோவில் வளாகத்தில் பணியாளர்களுக்கு, தீ ஏற்பட்டால் அதை தண்ணீரில் நனைத்த சாக்கு மூலம் எப்படி பாதுகாப்பாக அணைப்பது என ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டது. ேமலும், ரசாயன பொடி கலந்த தீயணைப்பான் கருவியின் செயல்பாடு குறித்தும், பயன்படுத்தும் முறை குறித்தும், கோவிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டால் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி, தீ பற்ற வைத்து அதை எப்படி அணைப்பது என தீயணைப்புத்துறையினர், ஒத்திகை செய்து காட்டியதுடன், அதை பணியாளர்களுக்கும் கற்றுக்கொடுத்தனர். பயிற்சியில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், கண்காணிப்பாளர் தமிழ்வாணன், லோகநாதன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.