பதிவு செய்த நாள்
20
பிப்
2018
02:02
பந்தலுார்: பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் நடந்த வேட்டைக்கொருமகன் கோவில் தேர் திருவிழாவில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதால், விழா களை கட்டியது. பந்தலுார் பகுதியில் பிரசித்திபெற்ற கோவிலாக தேவாலா வேட்டைக்கொருமகன் ஆயிரம்வல்லி,சக்தி முனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இதன் ஆண்டு தேர் திருவிழா கடந்த, 13ம் தேதி காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு அபிேஷக ஆராதனைகளும், கலை நிகழ்ச்சிகள், வழிபாடுகள் நடந்தது.தொடர்ந்து, 18ம் தேதி காலை நடைதிறப்பு, நீர்மால்ய தரிசனம், அபிேஷகம், மஹா கணபதி ஹோமம், மதியகால பூஜையுடன், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு சிங்காரி மேளம், நாதஸ்வரம், பூக்காவடியாட்டம், காரமடை மேளம், ஆதிவாசி மேளம், தோடர் நடனம், அம்மன்குடம், செண்டைமேளம், தாலபொலியுடன், தேர் ஊர்வலம் நடந்தது.
கோவில் வளாகத்திலிருந்து தேவாலா பஜார் வழியாக வந்து, மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தேர் ஊர்வலத் திலும், திருவிழாவிலும், தேவாலா, பந்தலுார், உப்பட்டி, அத்திக்குன்னா, நாடுகாணி, கரியசோலை, ஹட்டி, வாழவயல், காட்டிமட்டம், மூச்சிக்குன்னு, ரவுஸ்டன்மூலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இதனால் தேவாலா பகுதி களை கட்டியது. கூடுதல் போலீசார், கோவில் கமிட்டி நிர்வாகிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.