கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் திங்கட்கிழமை சோமவாரத்தையொட்டி உச்சிகால பூஜைகள் நடைபெற்றன. கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் அமைந்துள்ள, பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், சோமவாரத்தையொட்டி, நேற்று காலை 11:30 மணிக்கு மூலவர் பாலேஸ்வரருக்கு 1008லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனையும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. பின்னர் நேர்த்திகடனாக பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடந்த உச்சிகால பூஜையில் சிறுவாலை, விழுப்புரம், சூரப்பட்டு,கெடார் ஆகிய பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு பால், நன்னீர் தீர்த்தங்களும்,அன்னதானமும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத்,ஆலய அர்ச்சகர் கோபி அய்யர் செய்திருந்தனர்.