பதிவு செய்த நாள்
20
பிப்
2018
02:02
கோவை: கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் 28ல் நடைபெறுகிறது. அன்றைய தினம், உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்’ என, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளன.கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மக்கள் சமர்ப்பித்த மனுக்களில் சில...
அனுப்பர் பாளையம் மாநகராட்சி உயர்நிலை பள்ளியில், கணக்கு, அறிவியல் ஆசிரியர்கள் இல்லாமலேயே, இந்த கல்வியாண்டின் இறுதி வரை பள்ளி செயல்பட்டுள்ளது. மாநகராட்சி கல்வி அலுவலரிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ என, மாணவர்களின் பெற்றோர் மனு அளித்தனர்.
சிங்காநல்லுார் கள்ளிமடையில் வசிக்கும், ஆதிதிராவிட மக்களுக்கு, வெள்ளலுாரிலுள்ள அரசு நிலத்தை (க.ச.எண்.,266, 268) வீட்டுமனைகளாக வழங்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் நக்கீரன் மனு சமர்ப்பித்தார்.
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம், 2013ஐ முறையாக அமல்படுத்தி, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை காக்க வேண்டும் என, தமிழக தலித் முன்னேற்ற கழக தலைவர் நாகராஜ் வேண்டுகோள் மனு அளித்தார்.
சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை, வரப்பாளையத்தில் வசிக்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வீடின்றி சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என, ’கற்பி’ சமூக கல்வி மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சோமனுார் சுற்றுப்பகுதியை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில், சோமனுாரில் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், சமூக அமைப்புகள் இணைந்து, ரூ.2.5 கோடியில் மின் மயானம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அரசு சார்பில், 20 சென்ட் இடம் ஒதுக்க வேண்டும் என, சோமனுார் மக்கள் மனு கொடுத்தனர்.
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. திருவிழா தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் வழக்கம் போல், விடுமுறை அளிக்க வேண்டும் என, இந்துமுன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மனு கொடுத்தன. குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு, 423 மனுக்கள் வந்தன. ஒவ்வொரு மனு மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளகலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.